Thursday 26 November 2015

அரசு மேனிலைப் பள்ளி, பீர்க்கலைக்காடு, சிவகங்கை மாவட்டம்

நமது அமைப்பின் சார்பாக 26-11-2015 அன்று அரசினர் மேனிலைப் பள்ளி, பீர்க்கலைக்காடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. 6-ம் வகுப்பில் 44 மாணவர்களுக்கும் 7-ம் வகுப்பில் 43 மாணவர்களுக்கும் 8-ம் வகுப்பில் 50 மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.  பொறியாளர். திரு.ராமமூர்த்தி, காரைக்குடி அவர்களின் சார்பாக அவரின் நண்பரும், நமது அமைப்பின் செயல்பாடுகளில் தம்மை முழுமனதோடு இணைத்துக் கொண்டவரும், இயற்கை விவசாயியுமான பொறியாளர். திரு. முருகேஷ் அவர்கள் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார். விழா பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்களால் ஒருங்கிணைத்து செம்மையாக நடத்தப்பட்டது.

         

         

சிவகங்கை சீமை நம்மை தொடர்ந்து ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. இப்பள்ளியின் அமைவிடமும் அங்கிருந்த முதிர்ந்த, பெரிய, அடர்ந்த பசுமரங்களும், கிராமத்து வளர்ப்பாகிய நமக்கு, பள்ளியுடனும் அங்கிருந்த குழந்தைகளுடனும் சட்டென ஒரு பிணைப்பை ஏற்படுத்தின. தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் அணுகுமுறையும் பேச்சும் அந்த பிணைப்பை மேலும் வலுப்படுத்தின. 

எதிலும் ஒரு ஒழுங்கு! அகர வரிசைப்படி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படும் காட்சி

பரந்து விரிந்த பசுமரத்தடிரயில் பள்ளி மாணவர்கள் 

புத்தகமும் புன்னகையும்

 கதை சொல்லியே மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் கணித ஆசிரியர் திரு. சத்தியமூர்த்தி அவர்களாகட்டும், நம் செயல்பாடுகளைப் பற்றி அறிந்தவுடன் “ சார், எனக்கு கொஞ்சம் புக்ஸ் வாங்கித் தர முடியுமா? பெர்சனாலா கொஞ்சம் குழந்தைகளுக்கு குடுக்கலாம்னு இருக்கேன்” என்று உடனடியாக நம் தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்ட வேதியியல் ஆசிரியர் திரு. சரவணன் அவர்களாகட்டும், ‘இளையநிலா’ என்னும் காலாண்டிதழை நண்பர்களோடு இணைந்து வெளியிடுபவரும், குழந்தைகளுக்கென பிரத்யேகமாக கவிதை நூலை இயற்றி, கூடிய விரைவில் வெளியிட விருப்பம் தெரிவித்தவருமான, தமிழ் ஆசிரியர் திரு. புகழேந்தி அவர்களாகட்டும், விதை பதிவேடு இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நமக்கு ஆலோசனை வழங்கிய ஆசிரியைகள் திருமதி. சுமதி, திருமதி. மீனாட்சி ஆகியோராகட்டும் ஒவ்வொருவரும் ஒரு ஆசிரியர் எப்படியெல்லாம் இயங்க முடியும், எவ்வாறெல்லாம் நற்பண்புகளையும் நற்சிந்தனைகளையும் குழந்தைகள் மனதில் விதைக்க முடியும் என்பதை நமக்கு உணர்த்தினர். கணித ஆசிரியர் திரு.சத்தியமூர்த்தி அவர்கள் மாணவர்களுடன் பேசுவதைக் கேட்டால் சிரிக்காதவனும் சிரிப்பான் சிந்திக்க மறந்தவனும் சிந்திப்பான். மகாகவி ‘பாரதி’யில் தொடங்கி கல்வி கண் திறந்த கடவுள், கர்ம வீரர் ‘காமராஜர்’ வரை அவர் கதை சொன்னதும், அதில் நகைச்சுவையையும் நற்சிந்தனையையும் கலந்து சொன்னதும் அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். புதிய புத்தகங்கள், புதிய சிந்தனைகள், புகைப்படங்கள் மற்றும் புன்னகையுடன் அங்கே விதை விதைக்கப்பட்டது. நன்கொடையாளர், நல்லாசிரியர்கள் மற்றும் நண்பர் திரு.முருகேஷ்-க்கு நமது நன்றிகள். மகிழ்ச்சியோடு நம் பயணம் தொடரும்.



No comments:

Post a Comment